Wednesday 15 February 2012

மரணம்


 

மரணம் இறைபடைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. மரணத்திலிருந்து எந்த மனிதரும் தப்பிக்க இயலாது. 

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்.
 
'ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கக்கூடியதே...! ' 
(அல்குர்ஆன் -(சூரத்துல் அன்பியா)21:35)

மற்றுமோர் இடத்தில்
 
'ஒவ்வோர் சமூகத்துக்கும் (குறிப்பிட்டதொரு) தவணையுண்டு. அவர்களது தவணை வந்துவிட்டால் ஒரு நாழிகையேனும் பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள் '.
 (அல்குர்ஆன் - (சூரத்துல் யூனுஸ்) 10:49)
 
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகின்றான்: '

'ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்'
(அல்குர்ஆன் (சூரத்துல் அஃராஃப்) 7:34)

நவீன தொழிநுட்பங்களைப்பயன்படுத்தி எவ்வளவு பாதுகாப்பு முறைகளைக் கையாண்டு அமைக்கப்பட்ட கட்டிடங்களில் நாம் இருந்தாலும் மரணம் நிச்சயம்.

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்.
 
'நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். (அது) மிகப்பலமாகக் கட்டப்பட்ட கோட்டை (கொத்தளங்)களில் நீங்கள் இருந்தாலும் சரியே! ' 
(அல்குர்ஆன் - (சூரத்துன்னிஸா) 4:78)

அல்லாஹ்வின் தூதர் நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'(முறையற்ற) ஆசைகளைத் தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள் '.
 (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) ஆதாரம்: திர்மிதி 2229)

அல்லாஹ்வின் தூதர் நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'ஐந்து நிலைமைகள் ஏற்படுவதற்கு முன் (நற்காரியங்கள் செய்வதற்காக) ஐந்து நிலைமைகளைப் பேணிக்கொள்ளுங்கள். 


1. மரணத்திற்கு முன் வாழ்வையும், 
2. நோய்வருமுன் ஆரோக்கியத்தையும், 
3. பணிச்சுமை வருமுன் ஓய்வையும், 
4. வயோதிகத்திற்கு முன் வாலிபத்தையும், 
5. ஏழ்மைக்கு முன் செல்வ நிலையையும் பேணிக்கொள்ளுங்கள் '.
(ஆதாரம் : ஹாகிம்)

எனவே நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கை என்பது ஒரு சோதனை என்பதை நாம் உணர்ந்து அழியக்கூடிய பொருள்களின் மீது பேராசைக் கொள்வதை விட்டு விட்டு நிரந்தரமான மறுமை வாழ்விற்கு தேவையான நல்லறங்களின் மீது நாட்டம் கொண்டவர்களாக அதிகமதிகம் நற்காரியங்களைச் செய்வோமாக! வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு அருள் புரிவானாக.




No comments:

Post a Comment