Friday 2 December 2011

பெற்றோரைப் பேணுவோம்


 

ஒரு மனிதர் நபீ(ஸல்)அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார். அதற்கு நபி அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் 'உம்முடைய தாய்' என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் அவர்கள் 'உம்முடைய தாய்' என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது 'உம்முடைய தந்தை' என்று பதிலளித்தார்கள்
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புஹாரீ, முஸ்லிம்

'நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்;. அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்;. இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.' 
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 31:14)

பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை 'உஃப்' (சீ!) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்;;அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் ; இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! 
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 17:23)

இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக. மேலும், 'என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!' என்று கூறிப் பிரார்த்திப்பீராக! 
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 17:24)

பெற்றோரின் திருப்தி

பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை அல்லாஹ் திருப்தியடைய மாட்டான் என்று நபீ(ஸல்) கூறிய போது அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா? என்று கேட்கப்பட்டது.  அதற்கு , ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான் என்று நபீ(ஸல்)பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), புஹாரீ

பெற்றோரை கொடுமைப்படுத்துவோர் இவ்வுலகிலேயே தண்டனையை அடைவர்!

பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை, மரணத்திற்கு முன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபீ(ஸல்)அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ


'அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! என்று நபீ (ஸல); கூறியபோது மக்கள் அல்லாஹ்வின் தூதரே! (இழிவடையட்டும் என்றீர்களே) யார்'? என்று வினவினார்கள், 'முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ அடைந்திருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்' என்று பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.

   அல்லாஹ்வின் தூதர் நபீ(ஸல்) அவர்கள் நமக்கு கூறிச்சென்ற இந்த அறிவுரைகளை மனதில் நிறுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெறுவோமாக!

No comments:

Post a Comment