Monday 21 March 2011

முஸ்லிம்கள் யார்?

முஸ்லிம்கள் நபி இப்ராஹிமின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள்

இது உங்கள் பிதாவாகிய இப்ராஹிமின் மார்க்கம் என்றும், முஸ்லிம்களாக அன்றி மரிக்காதீர்கள் என்றும் வலியுறுத்துவதை முறையே
அல்குர்ஆன் 22:78 லும், அல்குர்ஆன் 3:102 லும் காணலாம்.


அல்லாஹ்வையும், எங்கள்பால் இறக்கப்பட்ட (திருக்குர்ஆன் வேதத்)தையும் இப்ராஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக், யாகூபு இவர்களுடைய சந்ததிகள் ஆகியயோரின் பால் இறக்கப்படடதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், மற்றைய நபிமார்களுக்கு அவர்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்ததையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம், அவர்களிலிருந்து எவருக்குமிடையில் நாம் வேறுபாடுகாட்டமாட்டோம், இன்னும், அவனுக்கே நாங்கள் முற்றிலும் கீழ்ப்படிகிறவர்கள்' என் (நம்பிக்கை கொண்டோரே) நீங்களும் கூறுங்கள்.
(அல்குர்ஆன் 2:136)


இன்று உலகில் வாழும் பெரும்பான்மையான மக்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், நபி இஸ்மாயிலின் பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்று மிக மட்டமாக கருதுகிறார்கள். அதாவது இஸ்மாயில் நபி ஆபிரஹாமின் இரண்டாம் மனைவிக்கு பிறந்தவர்கள். ஆனால் முன்காலத்தில் இரண்டாம் மனைவியை முதல் மனைவியின் அடிமை என வர்ணித்து எழுதியமையால் இஸ்மாயில் நபியின் தாயார் யூத, கிறிஸ்தவர்கள் மத்தியில் கண்ணியப்படுத்தப்படுவது இல்லை.


ஆகார் என்ற எகிப்து தேச அடிமை என்று மிகவும் துச்சமாக நபி இப்ராஹிம் அவர்களின் மனைவியை நினைக்கிறார்கள். இதற்குக் காரணம் இஸ்ராயில் மக்களை இறைவன் திருமறையிலும், இதற்கு முன்னால் வழங்கிய வேதங்களிலும் சிறப்பித்துக் கூறுவதேதான்.

எனினும் யூதர்களின் புத்தகமாகிய பழைய ஏற்பாடு யாக்கோபு நபிக்கு 12 புதல்வர்கள் பிறந்தார்கள், இதில் 8 பேர்தான் அவர் மனைவிகளுக்கு பிறந்தவர்கள், 4 பேர் அதாவது காத், தாண், ஆசேர், நவ்தலி ஆகியோர் யாக்கோபு நபியின் வேலைக்காரிகளுக்குப் பிறந்தவர்கள் என்றும் ஆதியாகமம் 30ம் அதிகாரம் கூறுகிறர்.

மேலும் சொத்துகள் கூட வேலைக்காரிகளுக்குப் பிறந்த 4பேருக்கும் மிகவும் வறட்சியான பகுதிகள் கொடுக்ப்பட்டன. தீர், சீதோன், சமாரியா, எருக்கோ என்று அந்தப் பகுதிகள் அழைக்கப்படுகின்றன. சமாரியா நாட்டார் யூதரோடு உறவுகளை ஏற்படுத்தி வாழ்வது இல்லை.

இந்த சமாரியா நாட்டுப் பெண் ஒருத்தியிடம் தான் யேசுநாதர் தண்ணீர் கேட்டார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

அவள் தீண்டத்தகாதவள் என்று யேசுநாதர் நினைக்காமல் தண்ணீர் கேட்டது அவளை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


யாக்கோபு நபிக்குப் பிறந்த மக்கள் ரூபன், யூதா, சிமியோன், லேபி, செபுலோன், இசக்கார் ஆகியோர் முதல் மனைவியாகிய லேயாளுக்குப் பிறந்தவர்கள்.

இரண்டாம் மனைவியாகிய ராகேளுக்கு யோசேப்பும், புன்யாமினும் பிறந்தார்கள்.

யாக்கோபு நபியின் மனைவிமார்களின் அடிமைகளாகிய சில்பாள், பில்காள் என்பவர்களுக்குத்தான் முறையே காத், ஆசேர், தாண், நப்தலி பிறந்தார்கள்.

இவர்களைத் தான் பனீஇஸ்லாயீல் கோத்திரத்தார் என்று அபாபிளும், குர்ஆனும் அழைக்கின்றன.

இதில் விசேஷம் என்னவென்றால் நபி இப்ராஹிம் முதலில் பெற்றெடுத்த இஸ்மாயில் அடிமைக்குப் பிறந்ததாகக் காரணம் காட்டி வெறுப்பது எந்த அளவு நியாயம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது 4 அடிமைகள் பனீ இஸ்ராயிலில் ஒட்டி இருக்கும் போது சாரா தன் கணவர் இப்ராஹிம் நபிக்கு மறுமனையாட்டியாய் கொடுத்த பின் அவருடைய மகனை ஓரம்கட்டி ஒதுக்கிப் பேசுவது நியாயம் இல்லை. என்றாலும் ஆதியாகமம் 16:12ல் இஸ்மாயில் நபி (அலை) துஷ்ட மனிதனாய் இருப்பான் என்று எழுதிவைத்துள்ளது மிகவும் வேதனையான காரியம்.


மேலும், நபி இஸ்மாயில் பரம்பரையில் நபிகள் நாயகம் பிறந்த காரணத்தால் துஷ்ட பரம்பரை என்று ஒதுக்கிவிட்டார்கள். அந்த பரம்பரையில் தான் முஸ்லிம்கள் தோன்றினார்கள் என்றுதான் அவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது.

இதை சிந்திக்காத மேலை நாட்டு மக்கள் இன்று வரை இந்த விஷயத்தைக் கக்கி கொண்டே இருப்பதையும் காணலாம். ஒரு குவளை பாலில் ஒரு துளிவிஷம் போதுமானது.

அதே போல் இந்த ஒரு செய்தி மனித சமுதாயத்தில் இன்னும் வெறுப்பை தூண்டக் கூடியதாக உள்ளது. அதே நேரம் இஸ்மாயில் நபியை குறித்து 'அவன் துஷ்ட மனிதனாக இருப்பான் அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும், எல்லோருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும். தன் சதோதரர் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான்' என்று ஆதியாகமம் 16:12 ல் எழுதி உள்ளது.

 உண்மையில் மனுக்குலம் மீது வெறுப்பை பரஸ்பரம் ஏற்படுத்துவதே எழுதியவன் நோக்கம் ஆகும்.

இது சாத்தானின் தூண்டுதலால் எழுத்தப்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை.

நபி இஸ்மாயில் குறித்து இறைவன் திருக்குர்ஆனில் மிகவும் கண்ணியப்படுத்திக் கூறுவதைப் பல இடங்களில் காணலாம்.

அவர் பாலகனாய் இருந்தபோது தன்னை பலி இடத்துணிந்த தந்தையிடம் 'என் அருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்ட படியே செய்யுங்கள் ''அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் உள்ளவனாகக் காண்பீர்கள்'' என்று கூறியதாக இறைவனே திருக்குர்ஆன் 37:102ல் குறிப்பிடுகிறான். மேலும் அவர் 'வாக்குறிதியில் உண்மையாளராக இருந்தார்' என்றும் அவர் தூதராகவும் நபியாகவும் இருந்தார் என்றும் இறைவன் 19:54 ல் குறிப்பிடும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.

இவ்வளவு பெரிய அந்தஸ்தைப் பெற்ற நபி இஸ்மாயிலை துஷ்டமனிதன் என்ற பட்டம் கொடுத்தமைக்கு இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.


இந்த இஸ்மாயில் நபிக்கு சொத்துரிமை வழங்குவதில் முறை கேடு நடந்து விடக் கூடாது என்பதற்காக உபாகமம் 21:15-17 வரையிலான வசனங்களில் 'ஒருவன் இரண்டு மனைவி உடையவனாக இருந்து ஒருத்திமேல் அன்பாகவும், மற்றவள் மேல் வெறுப்பாகவும் இருந்து, இருவரும் அவனுக்கு பிள்ளைகள் பெற்றால், முதலில் பிறந்தவன் வெறுக்கப் பட்டவளிடத்தில் பிறந்த மகன் ஆனாலும் சொத்துரிமை இரண்டு பங்கு அவனுக்கு சேரும். மட்டுமல்ல, அவன்தான் சேஷ்டபுத்திர அவகாசத்துக்கும் உரிமையாளனாவான்' என்று காணப்படுகிறது.


இந்த அளவு சிறப்பாக அவர்களுடைய சட்டம் இருந்தும் கிறிஸ்தவர்கள் நபி இஸ்மாயீலை இன்றளவும் வெறுத்து, ஈசாக் வம்சத்தாரை முதல் நிலைக்கு தள்ளியது புரியாத புதிராக இருக்கிறது.

சேஷ்டபுத்திர அவகாசம் நபி இஸ்மாயிலைத்தான் சாரும் என்று பைபிள் கூறியிருக்க அவரை கிறிஸ்தவர் நினைக்காமல் போனதற்கு கைபிளை ஆராயாமல் விட்டதே காரணம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலம் வரையில் தொடர்ந்து விருத்தசேதனம் (கத்னா) செய்து வாழ்ந்து வந்தவர்கள் இஸ்மாயில் பரம்பரையான அரேபியர்கள்.

ஆனால் ஈசாக் பரம்பரை என்று சொல்லும் இஸ்மாயீல் மக்கள் யூதர்களாவும், கிறிஸ்தவர்களாகவும் பிரிந்து பவுலின் போதனைப்படி விருத்தசேதனம் (கத்னா) இல்லாதவர்கள் ஆனார்கள்!


'நீங்கள் விருத்தசேதனம் செய்து கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்று பவுலாகிய நான் சொல்லுகிறேன்' என கலாத்தியர் 5:2ல் பவுல் எழுதியுள்ளதை காணலாம்.

ஆனால் ஆதியாகமம் 17:12-14 வரையிலான் வசனங்களில் விருத்தசேதனம் வலியுறுத்தப் படுவதையும் மீறினால் அறுப்புண்டு போவான் என்பதையும் கர்த்தர் வலியுத்துவதை காணலாம்.


இறைக் கொள்கைக்கு மாற்றமான கூட்டம் உருவாகி மனிதக் கற்பனைக்கு இடம் கொடுத்ததால் இறைவன் இஸ்மாயில் கோத்திரத்தில் இறுதி தூதரை தேர்ந்தெடுத்து வேதம் அருளினான்.

 அந்த வேதத்தில் ஆபிரகாம், இஸ்மாயில், ஈசாக், யாக்கோபு போன்ற நபிமார்களும் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்பதை திருக் குர்ஆன் 2:130-136 வரையிலான வசனங்களில் காணலாம்.


முஸ்லிம்கள் நபி இப்ராஹிமின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.

இது உங்கள் பிதாவாகிய இப்ராஹிமின் மார்க்கம் என்றும், முஸ்லிம்களாக அன்றி மரிக்காதீர்கள் என்றும் வலியுறுத்துவதை முறையே 22:78 லும், 3:102 லும் காணலாம்.


'நபி ஆபிரஹாமிடம் சரணடையும் என்றவுடன் அவர் அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிப் பட்டவனாக 'சரண் அடைந்தேன்' என்று கூறினார்.


இதையே இப்ராஹிம் தம் குமாரர்களுக்கு உபதேசம் செய்தார். யாக்கோபும் எகிப்து தேசத்தில் வைத்து வாக்குறுதி வாங்கினார். 'என் குமாரர்களே அல்லாஹ் உங்களுக்கு சன்மார்க்கமாகிய இஸ்லாமை தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்' என்று கூறியதை திருக்குர்ஆன் வசனம் 2:132ல் காணலாம்.


மேலும், இதே போன்ற நிகழ்ச்சிகளைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களும் நமக்குத் தெரிவிக்கின்றன.

அல்லது யாகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் நீங்கள் பிரச்னையில் இருந்தீர்களா? அவர்தம் மைந்தர்களிடம், எனக்குப் பின்னர் எதனை நீங்கள் வணங்குவீர்கள்?' எனக் கேட்டதற்கு, 'உம்முடைய வணக்கத்திற்கு உரியவனும், உம்முடைய மூதாதையர்களான இப்லாஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக் ஆகியவர்களின் வணக்கத்திற்குரியவனுமாகிய ஒரே ஒரு (இறை)வனயே நாங்கள் வணங்குவோம். அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாகவும் இருப்போம்' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 2:133)


அல்லாஹ்வையும், எங்கள்பால் இறக்கப்பட்ட (திருக்குர்ஆன் வேதத்)தையும் இப்ராஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக், யாகூபு இவர்களுடைய சந்ததிகள் ஆகியயோரின் பால் இறக்கப்படடதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், மற்றைய நபிமார்களுக்கு அவர்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்ததையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம், அவர்களிலிருந்து எவருக்குமிடையில் நாம் வேறுபாடுகாட்டமாட்டோம், இன்னும், அவனுக்கே நாங்கள் முற்றிலும் கீழ்ப்படிகிறவர்கள்' என் (நம்பிக்கை கொண்டோரே) நீங்களும் கூறுங்கள். (அல்குர்ஆன் 2:136)


இது இவ்வாறிருக்க முஸ்லிம்கள் யேசுநாதருக்குப்பின் தோன்றினார்கள். நபிகள் நாயகம்தான் முஸ்லிம்களின் தலைவர் என்று கிறிஸ்தவர் தங்களை வேறுபடுத்தி பேசுவது இவர்களின் அறியாமை என்று தான் நாம் விளங்க வேண்டும். என்றாலும் உண்மையை அவர்களுக்கு முன் எடுத்து வைத்து இறை அன்பை பெறுவோமாக.

No comments:

Post a Comment